திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.63 திருச்செங்காட்டங்குடி பண் - பஞ்சமம் |
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.
|
1 |
பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள்
கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய
இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே.
|
2 |
குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.
|
3 |
கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேனமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.
|
4 |
ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே.
|
5 |
குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்சரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.
|
6 |
கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்
ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.
|
7 |
கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந்
தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே.
|
8 |
நறப்பொலிபூங் கழக்கானல் நவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே
சிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.
|
9 |
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
10 |
செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |